10 பிப்ரவரி 2012

"இருள்"களுக்கான பரிந்துரை


இருள்- எதிர் மறைகளின் குறியீடாகவே கற்ப்பிக்கப்பட்டுள்ளது. கறுப்பைக் கட்டிக்கொண்ட இருள், பயத்தின் அடையாளமாய், விருப்பத்திற்க்குரியத்தில் இருந்து அன்னியப்படுத்தப்படுள்ளது. இருளின் ஒலிகள் காதில் கிலியை நுழைக்கும்  சாத்தானின் பேச்சாக பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.

கண்கள் கறுப்புக்கு மேல் ’இருளை’ படிக்க முயலாததனால் இருளின் வரைவிலக்கணம் வெறும் கறுப்புடன் மட்டும் மட்டுப்படுத்தப்படுள்ளது. 'கறுப்பின் வல்லமை’ பற்றிய வரலாற்று மறைப்பும், மறை மொழிபெயர்ப்பும் இருள் பற்றிய புரிந்துகொள்ளலை இயலாமைக்குட்படுத்தியுள்ளது. கறுப்பின் “நிஜம்” பற்றிய புரியாமை, இருளின் புரிதலை இல்லாமலாக்கிவிட்டது. இருளின் பின்னால்  கேட்கும் ஒலிகளே இருளின் ஒலிகளாக காது கற்பிதம் செய்து வைத்துள்ளது. இருள் தன்னை நியாயப்படுத்த ஒருபோதும் முற்படாததனால், மனிதன் தன் ஆயுளின் அரைவாசியை அதனுடன் கழித்தாலும் கூட, இருளை விரோதிதுக்கொண்டே இறந்து போகின்றான்.

இருள் பற்றிய எம் புலக்காட்சிக்கு இருள் பொறுப்பல்ல என்று கற்றுக்கொள்வதற்கு "வெளிச்சம் "  எமக்கு வாய்ப்பைக் கொடுப்பதில்லை. எல்லாவற்றையும் காட்டுவது போலக் காட்டி  "சரிகளை" மறைக்கும் "வெளிச்சங்கள்" பற்றி பேசுவது, வெளிச்சத்துக்கு செய்யும் துரோகம் என்ற குற்ற உணர்வு வேறு. இவ்வாறான குற்ற உணர்வுகட்கான மூலம், நம் கற்பித்தல் முறைகளின் அறுவடைகளில் ஒன்று.  இருளின் படைப்புக்களை எல்லாம் ஒளி வெளிச்சம் போட்டு விற்பனை செய்யும். உழைக்கும் வர்க்கம் போல், உழைப்பின் பலன் இழந்த இருள், ஒளியின் அனுபவிப்பைப்பார்த்து மெளனமாய்க் கண் மூடும். இருளுக்காய் வழக்காடப் புறப்பட்ட ஒருசில மின்மினிகளையும் பகலின் வெளிச்சம் மீண்டும் மீண்டும் கொல்லும்.

இருள் நிஜம், பகல் சூரியன் வழங்கிய கடன். கடனாளியை விட, இல்லாதவன் பலவான். பகல்ஆக்கத்தில் பங்கெடுப்பது உண்மை எனினும், ஆரோக்கியத்தை திருடிக்கொள்கிறது. பகல் வெள்ளையைக் கட்டிக்கொண்டு திருடர்களை மறைத்து வைத்துள்ளது. நிகழ்ச்சிகள் வெளிச்சத்தில் நடந்தாலும், வளர்ச்சி இரவில் தான். இது வெளிச்சத்துக்கெதிரான வழக்காடல் அல்ல. தப்பான கற்பிதங்களுடன் மெளனித்து இறந்து கொண்டிருக்கும் "இருளுக்கான" பரிந்துரை. இங்கு “இருள்” என்பது வெறும் இருள் மட்டுமல்ல, அதன் பிரதிகளாய் சஞ்சரிக்கும் எல்லாமும் தான்.