தம்பட்டம்

ரீ.ரீ. மயூரன், தொண்ணூறுகள் மூப்படைகையில் எனக்குள் கர்ப்பமான "நான்". என் இரசாயன- கணத்தாக்க-இயல்பூக்க மாற்றங்களை விம்பப்படுத்த கிடைத்த கண்ணாடி. என் பிரதிபலிப்புக்களை சுமத்தி அனுப்பக்கிடைத்த பொதி மாடு. இந்த பெயரும், இவனும், நானல்ல. உங்களுடனான ஊடாட்டத்தில், இடைத்தாக்கமாகி எனக்குள் நிகழ்ந்துள்ள வீழ்படிவின் சாட்சி! இலக்குகளுக்கும், யதார்த்தங்களுக்கும் சரி நடுவில் நடந்துகொண்டிருக்கும் நான் விரும்பும் மனிதன்.எதனையும் விட, நட்பையும் நம்பிக்கைகளையும் சேகரிப்பதில் ஆர்வப்படும் சமூகப்பிராணி . பரந்த எழுத்து வயலில், ஒரு சிறு பாத்தியிலாவது பயிர்களை நடுவதில் நாட்டமுள்ள உள்ளூர் தோட்டக்காரன். பகிரும் பிரயத்தனத்தனத்தால்- இன்று எனக்கும், உங்களுக்கும் அறிமுகமாகியுள்ள பொதுப்பேர்வழி!


இவனுக்கு எழுத விளைந்த விபத்து ஏன் நிகழ்ந்தது?

எதனால் எழுதவேண்டும்? எனதும் உங்களதும் எண்ண அலைகள் ஏன் பரிவுபட வேண்டும்? மூளையோ- மனதோ, மலரும் சிந்தனைகளை எழுத்தாக்கி எறியும் மனிதர்களின் உளவியல் தேவை தான் என்ன? வித்தியாசங்களை விதைத்து, தனித்துவங்களை அறுவடை செய்வதில் அப்படி என்ன ஆர்வம் வேண்டியிருக்கிறது? சிப்ஸ் மெமோரி, சிலிக்கன் புரட்சி, பைனரி உலகம்... என்ற வேகப் புதுமைகளுக்குள், சொற்களை அடுக்கி உங்களையும், என்னையும் சூடேற்ற (அல்லது குளிர்வேற்ற) வைக்கும் சூட்சும சக்தி எது?? நீங்களும் நானும், எழுதாவிட்டாலோ, வாசிக்கப்படாவிட்டாலோ, இந்த உலகின் காற்றும், கடலும் இல்லாமல் போய்விடுமா என்ன? எழுதி கிழிப்பதில் மரணித்துப்போன மனித நிமிடங்களின் "ஆக்கப்பெறுமதி" பற்றி யாரும் ஆராய்வதாக தெரியவில்லை. விளைவுகள் பற்றிய கவலை இல்லாது விவசாயம் செய்யும் தோட்டக்காரர்களை எழுத்து வயலில் மட்டும் தான் சந்திக்க முடியும், இதில் "புரோடுக்டிவிட்டி " எங்கே இருக்கிறது என்று யாரும் மதிப்பீடு செய்வதில்லை. "பலன்களையும்" "விளைவுகளையும்" புறந்தள்ளிவிட்டு உழைக்கும் தியாகிகளின் பட்டியலை நீட்டுகிறது எழுத்து வெறி.

இப்படி, அவதி நிறைந்த உலகிலும் , எழுதுவதற்கும், வாசிப்பதற்குமான போதை எந்த அட்கொகோலினால் ஏற்ப்பட்டுப்போயுள்ளது? இலக்கில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் வண்டிகளின் வரிசையில் இணைவதென்பது "பலன்களின்" பட்டியலில் மைனஸ் மீதிக்கான ஏற்பாடு. இது எழுதுவோர் தொடர்பான சுற்றத்து நண்பர் சிலரின் கணிப்பு! இருந்தும், இது நிறுத்தப்படமுடியாத நதியாக உள்ளது. சேரும் கடலை பற்றி கவலைப்படாது, ஜாலியாகவே அனுபவித்து நகரும் நதியாக இருப்பது குழந்தைமை உணர்வை மீட்டு எடுப்பதாக உள்ளது. அது எதனிலும் மேவிய வரம்.

ஏன் எழுத வேண்டியாகியுள்ளது? இது போதை அல்ல. உணர்வுள்ள உயிரிகளின் அடிப்படை தேவை. பகிர்வு என்பது இவர்களுக்கு சுவாசத்துடன், சமாந்தரமாகிப் போயுள்ளது.எழுதுதல் - கல், ஓலை தாண்டி, இன்று கணணி வரை இன்னும் காய்ந்தே போய்விடாத சமாச்சாரம்.

எழுத்து தவம்.
எழுத்து தியானம்.
எழுத்து, அழுத்த சக்தியை இயக்க சக்தியாக்கும் பொறி.
முற்றுப்புள்ளிகளை, கொம ஆக்கும் ஏற்பாடு,
எழுத்து அஞ்சல் ஓட்டம்,
அவர்கள் தந்துள்ளனர், நாம் ஓடியாகவேண்டியுள்ளது.
எழுத்து நின்மதி,
எல்லா உணவும் உண்டபின், இறுதியாக அருந்தும் தண்ணீர்!
இங்கு...
அறுவடைகளை விட, விதைப்புக்களே முக்கியமாகியுள்ளது!!