04 ஜூன் 2020

மழை பெய்த நாள்


செடிக்கும் - நீருக்கும், நீருக்கும் -வானுக்கும், வானுக்கும்-செடிக்குமாய் இணைந்து போய்க்கிடக்கும் உறவின் பிரதியை அதே ஈரத்துடன் அறிமுகப்படுத்திய நாள் இது. 

மண்ணின் தாகத்தை அதில் அமரும் மனிதர்கள் புரியாவிடினும், மழை புரியும். 
மண்ணின் தனிமையும், வெறுமையும், பொறுமையும் மழையின் ஒற்றைத்தூறலில் மரணிக்கும். 

வரட்சியே தன் வாழ்வெனக் காய்ந்து போய்க்கிடக்கும் மண்ணில், ஏதோ ஓரு நாள் பெய்யும் மழை பச்சையைப் பரிசளிக்கும். கடந்து போன புள்ளினங்களும், புல்லினங்களும் ஒரே இரவில் மீண்டும் வந்து மண்ணின் மகத்துவத்தைப்பாடும். மண்ணின் நீண்ட காலத் தவத்தின் வரம், ஒரே நாளில் வந்தடையும் அந்த மழையின் உறவே.    

மண்ணைப்போல் இங்கே காத்திருக்கும் மனிதர்களுக்கு அவர்களின்  "மழையைத்" தரிசிக்கும் நாளே வரம். வற்றிப்போய்க்கிடக்கும் எல்லாச் செழிப்பையும் வாழ்வில் அறிமுகப்படுத்தும் அந்த மழை எல்லோரின் மீதும் ஏதோ ஒரு நாள் பொழிய வேண்டும். அது இருபது வருடங்களின் முன், எனக்கு இதே நாளில் பொழிந்தது. இன்னும் நனைந்து கொண்டே தான் இருக்கிறேன்.  

Photo I T.Mayuran I Jaffna I 2012