06 ஏப்ரல் 2014

மகிழ்ச்சியின் எழுத்து

உயிர், மெய், ஆயுத எழுத்துகளுள் மகிழ்ச்சியின் எழுத்தெது


முதன்மையாயும், தனித்துவமாயும் முன் மொழியப்பட்ட எழுத்துகளுள் மகிழ்ச்சியின் எழுத்தை என்னால் அடையாளம் காண முடியவில்லை. இது என் தனிப்பட்ட உணர்வின் பிரதிபலிப்பு மட்டுமே. என் மகிழ்ச்சியின் எழுத்துக்கள் எல்லாம் 'உயிர்மெய்'க் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். இணைவில் பிறந்த எழுத்துக்கள் எல்லாம் எதோ ஒரு இசையை தங்களுள் பாடிக் கொண்டிருப்பதாய் ஒரு உணர்வு.

இணைவின் முடிச்சுக்களில் தெரியும் மகிழ்ச்சியின் தடங்கள், இரண்டினது உறவையும் பேசிக்கொண்டுள்ளன. ஒளியினதும், மொட்டுக்களதும் இணைவு, மலர்களைப் பரிசளித்துள்ளன. விதைகளுடனான- நிலத்தின் இணைவு, மரங்களை பரிசளித்துள்ளன. பூமி பிரிவுகளின் படைப்பால் ஆனதல்ல, இணைவுகளின் வலிமையால் ஆனது. இருந்தும், இங்கு, இணைவுகட்கான வாய்ப்புக்களை விட, பிரிவுகட்கான வாய்ப்புக்கள் வலிமை பெறுவதாய் ஒரு உணர்வு. உணர்வு மட்டுமே!

'
முதன்மைகளை' நிறுவும் முயற்சியில் 'இணைவுகள்' இல்லாது ஒழிக்கப்படும் நிலைமைகள் கவலையானவை. எதோ ஒன்றுக்குரிய போட்டிகளில் மனிதர்கள் தீவுகளாவதை இரசிக்க முடியவில்லை. பிள்ளைகள், தங்களை வார்க்கும் அச்சுக்கள் கூட இங்கு 'போட்டிகள்' எனும் மூலகத்தாலேயே ஆக்கப்பட்டுள்ளது. தனியன்களின் வீரியங்களே இங்கு போற்றுதற்குரிய பொருளாகியுள்ளது.

அலைகள் அற்ற கடலும், கரைகள் அற்ற அலைகளும் மகிழ்ச்சியின் வடிவமாய்த் தோன்றவில்லை. கடல்களைத் தரிசிக்க வரும் மனிதர்களாலும், சூரியனாலும் கடற்கரைகள் மேலதிக மகிழ்ச்சியைப் பேசுகின்றன. ஒவ்வொரு இணைவுகளின் நிமிடத்திலும் பூமி மகிழ்ச்சியைக் கொண்டாடுவதாய் ஓர் உணர்வு.

இருக்கும் எழுத்துக்களை வைத்துக்கொண்டு, இன்னும் இன்னும் உயிர்மெய் எழுத்துக்களை உற்பத்தி செய்வோம். இணைவுகளின் வயலில், மகிழ்ச்சியின் பூக்களைத் தரிசிப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக