18 பிப்ரவரி 2025

எம்மைக் கண்டெடுப்போம்

 எல்லோரும் கலைத்துக்கொண்டோடும் எல்லாமும் காணமல் போன நாள் ஒன்றில், எம்மைக் கண்டெடுப்பதற்கான கணம் ஒன்று கிடைக்கும்.

4.5 பில்லியன் ஆண்டுகளாய் வாழும் பூமியின் ஏதோ ஒரு படிமம் எம்மைப் பார்த்து புன்னகைக்கும். இங்கே நீளமாக வாழ்ந்துகொண்டிருக்கும் நிலவும், காற்றும், நதியும், செடியும் எமக்குள் புதைந்து போய்க்கிடந்த மகிழ்ச்சியின் மேல் படைகளை உரசும்.

இயற்கையின் உறவு எம் அத்தனை அணுக்களையும் அணைக்கும் கணத்தில் நாம் மீண்டும் ஒரு முறை பிறந்திருப்போம்.

இப்போது சாகா வரம் பெற்ற மகிழ்ச்சியின் கரங்களில் நிஜமான நாமாக நிறைந்திருப்போம்.




12 ஜனவரி 2025

தரிப்பு!

 தரிப்பு!

நிறத்தை மாற்றியது வானமே தான். மனதில் மட்டுமேன் மகிழ்ச்சி? காலை, நீலமாய் இருந்த இந்த நீள வானில், மஞ்சளைப் பூசியது சூரியன் அல்லவா? இருந்தும், தொலை தூரத்தில், தொடர்பே இல்லாமல் அலைந்து கொண்டிருந்த மனதில் மகிழ்ச்சியை
உருக்கியது எது?
தரிப்பு!
ஓட்டத்தின் நடுவே, புலன்களுக்கு ஓய்வு கொடுக்கக் கிடைத்த ஒரே ஒரு கணம் அத்தனை மாறுதல்களையும் மலர விட்டுள்ளது. அதன் கீழ், அரும்பத்தொடங்கிய இரசனை, நம்பிக்கை, ஆதரவு, வாழ்வின் அர்த்தம் என அத்தனையும் சேர்த்து சிந்தனைகளையும், உணர்வுகளையும் உற்சாக பாத்திரத்தில் வைத்து பரிசளித்துள்ளது.
உலர்ந்து போன ஓவ்வொரு பொழுதுகளுக்கும் அடுத்ததாய் ஒரு மஞ்சள் மாலை இருக்கும். வானம் மலரும், ஆதலினால்.. மனமும் மகிழ்ந்தே தீரும். அதுவரை.. அடுத்த உயிர்ப்புக்கு இடையில், இந்த வானம் என்னை எல்லோருக்கும் கூறச் சொல்லிய ஒற்றை வார்த்தை
தரிப்பு!

04 ஜூன் 2020

மழை பெய்த நாள்


செடிக்கும் - நீருக்கும், நீருக்கும் -வானுக்கும், வானுக்கும்-செடிக்குமாய் இணைந்து போய்க்கிடக்கும் உறவின் பிரதியை அதே ஈரத்துடன் அறிமுகப்படுத்திய நாள் இது. 

மண்ணின் தாகத்தை அதில் அமரும் மனிதர்கள் புரியாவிடினும், மழை புரியும். 
மண்ணின் தனிமையும், வெறுமையும், பொறுமையும் மழையின் ஒற்றைத்தூறலில் மரணிக்கும். 

வரட்சியே தன் வாழ்வெனக் காய்ந்து போய்க்கிடக்கும் மண்ணில், ஏதோ ஓரு நாள் பெய்யும் மழை பச்சையைப் பரிசளிக்கும். கடந்து போன புள்ளினங்களும், புல்லினங்களும் ஒரே இரவில் மீண்டும் வந்து மண்ணின் மகத்துவத்தைப்பாடும். மண்ணின் நீண்ட காலத் தவத்தின் வரம், ஒரே நாளில் வந்தடையும் அந்த மழையின் உறவே.    

மண்ணைப்போல் இங்கே காத்திருக்கும் மனிதர்களுக்கு அவர்களின்  "மழையைத்" தரிசிக்கும் நாளே வரம். வற்றிப்போய்க்கிடக்கும் எல்லாச் செழிப்பையும் வாழ்வில் அறிமுகப்படுத்தும் அந்த மழை எல்லோரின் மீதும் ஏதோ ஒரு நாள் பொழிய வேண்டும். அது இருபது வருடங்களின் முன், எனக்கு இதே நாளில் பொழிந்தது. இன்னும் நனைந்து கொண்டே தான் இருக்கிறேன்.  

Photo I T.Mayuran I Jaffna I 2012 


















29 ஜூன் 2014

திசைகள் தொலையாத திருப்பங்கள் வேண்டும்

Photo I T.Mayuran I Kandy I 2013
வளைவுகளின் அடுத்த பக்கத்தில், இயற்கை எதை எழுதி வைத்துள்ளதென்பதை எதிர்வு கூறும் வல்லமை எப்போது வரும்? 

இது, நண்பனின்  வலி நிறைந்தவோர் திருப்பம்பற்றி அறிந்துகொண்ட நாள். விடைகளே அற்ற கேள்விகளை, வாழ்க்கை தன் பாதையின் இடையில் பெரிய தடைகளாய்ப் போட்டு வைத்துள்ளது. எந்தப் பயணமும் இதுவரை நேர்கோட்டில் நிகழ்ந்ததில்லை என்றபோதும், எதிர்பார்க்க முடியாத வளைவுகளில் வாழ்க்கையின் மறு பகுதியை தரிசிக்கும் போது மனது கனக்கிறது.

திருப்பங்களின் மறுகோடியில் விருப்பங்களேயற்ற வலிகள் காத்திருந்தாலும், திசைகளைத் தொலைக்காத அவர்களின் பயணத்திற்காய் பிரார்த்திக்கத் தோன்றுகிறது!!

22 மே 2014

நெருப்பெரிந்த நிலத்தின் பூக்கள்

மண்ணின் தேவதைகள்
மௌனத்தைப் பேசிக்கொண்டிருக்கையில்..
அவை,
'மாலை' க்கான ஆசையில்
மலர்ந்து கிடக்கிறதென
மொழி பெயர்த்துகொண்டிருப்போரே..
புரிந்துகொள்ளுங்கள்...
மலைகளுக்குள் மட்டுமல்ல
இங்கு
பூக்களுக்குள்ளும்
பூகம்பமுண்டு.
இவை,
நெருப்பெரிந்த நிலத்தில்
புதையுண்ட,
விதையிலிருந்தேறி
வந்த பூக்கள்!

26 ஏப்ரல் 2014

விடுதலை


----------------
சீக்கிரம் மகிழ்ந்து முடியுங்கள்,
உங்கள் எல்லையற்ற
மகிழ்ச்சிப் பொழுதுகளின் முடிவில்,
மண்டியிட்டுக் கிடக்கிறது எங்கள் சுதந்திரம்.
Photo I T Mayuran I 2014 I Dehiwala 

06 ஏப்ரல் 2014

"மலர்வின்" மொழி

                       Photo I T.Mayuran I polonnaruwa I 2012 



இது பொலனறுவையின் ஒரு காலைப்பொழுதில், சூரியன் கண் விழித்துக்கொண்டிருக்கும் போது கைப்பற்றியது.
நான் இரவின் மனிதன். அதிகாலைகளைப் பற்றி அதிகம் கவலைப்படாத எனக்கு, இந்தநாள் மலர்வின் மொழியை அதன் எல்லா அர்த்தத்துடனும் போதித்துப்போனது. 
சலிப்பே இல்லாது, தன் பிறப்பை, தினமும், ஏராளமான கொண்டாட்டங்களுடன் தொடங்கும் காலைப் பொழுதுகள், தவிர்க்கப்பட முடியாதவை. 

எழுத முடியா நிறங்களுடன் புறப்படும் சூரியனை, எல்லா மரமும், புல்லும், பறவைகளும், நீர் நிலைகளும், மேகங்களும் தங்களுக்கே உரிய மொழியில் மகிழ்ச்சி பேசி அழைக்கும் கணங்கள் அற்புதம். புதிய புதிய இடங்களில், ஒரு நாளின் பிறப்பைத் தரிசிப்பதென்பது, வேறுபட்ட வலிகளுக்கான ஒரே மருந்தென முன்மொழிய முடிகிறது. 


இந்த மலர்வின் மொழி - எல்லோருக்குமான நேர் சிந்தனையின் சாவியாக உள்ளது. காயங்களின் கதவுகளைத் திறந்து ஒளி நோக்கிச்செல்லும் உந்துதலைத் தருகிறது. இனி நம் 'காலைகளைக்' கொஞ்சம் கவனித்துக்கொள்வோம். மலர்வின் சக்தி பற்றிச் சிந்திக்கத் தூண்டிய இந்நாளுக்கு என் நன்றிகள்.

மகிழ்ச்சியின் எழுத்து

உயிர், மெய், ஆயுத எழுத்துகளுள் மகிழ்ச்சியின் எழுத்தெது


முதன்மையாயும், தனித்துவமாயும் முன் மொழியப்பட்ட எழுத்துகளுள் மகிழ்ச்சியின் எழுத்தை என்னால் அடையாளம் காண முடியவில்லை. இது என் தனிப்பட்ட உணர்வின் பிரதிபலிப்பு மட்டுமே. என் மகிழ்ச்சியின் எழுத்துக்கள் எல்லாம் 'உயிர்மெய்'க் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். இணைவில் பிறந்த எழுத்துக்கள் எல்லாம் எதோ ஒரு இசையை தங்களுள் பாடிக் கொண்டிருப்பதாய் ஒரு உணர்வு.

இணைவின் முடிச்சுக்களில் தெரியும் மகிழ்ச்சியின் தடங்கள், இரண்டினது உறவையும் பேசிக்கொண்டுள்ளன. ஒளியினதும், மொட்டுக்களதும் இணைவு, மலர்களைப் பரிசளித்துள்ளன. விதைகளுடனான- நிலத்தின் இணைவு, மரங்களை பரிசளித்துள்ளன. பூமி பிரிவுகளின் படைப்பால் ஆனதல்ல, இணைவுகளின் வலிமையால் ஆனது. இருந்தும், இங்கு, இணைவுகட்கான வாய்ப்புக்களை விட, பிரிவுகட்கான வாய்ப்புக்கள் வலிமை பெறுவதாய் ஒரு உணர்வு. உணர்வு மட்டுமே!

'
முதன்மைகளை' நிறுவும் முயற்சியில் 'இணைவுகள்' இல்லாது ஒழிக்கப்படும் நிலைமைகள் கவலையானவை. எதோ ஒன்றுக்குரிய போட்டிகளில் மனிதர்கள் தீவுகளாவதை இரசிக்க முடியவில்லை. பிள்ளைகள், தங்களை வார்க்கும் அச்சுக்கள் கூட இங்கு 'போட்டிகள்' எனும் மூலகத்தாலேயே ஆக்கப்பட்டுள்ளது. தனியன்களின் வீரியங்களே இங்கு போற்றுதற்குரிய பொருளாகியுள்ளது.

அலைகள் அற்ற கடலும், கரைகள் அற்ற அலைகளும் மகிழ்ச்சியின் வடிவமாய்த் தோன்றவில்லை. கடல்களைத் தரிசிக்க வரும் மனிதர்களாலும், சூரியனாலும் கடற்கரைகள் மேலதிக மகிழ்ச்சியைப் பேசுகின்றன. ஒவ்வொரு இணைவுகளின் நிமிடத்திலும் பூமி மகிழ்ச்சியைக் கொண்டாடுவதாய் ஓர் உணர்வு.

இருக்கும் எழுத்துக்களை வைத்துக்கொண்டு, இன்னும் இன்னும் உயிர்மெய் எழுத்துக்களை உற்பத்தி செய்வோம். இணைவுகளின் வயலில், மகிழ்ச்சியின் பூக்களைத் தரிசிப்போம்

புரிதல்

                                                                  
Photo I T.Mayuran I Jaffna I 2012 

நீ
உயரத்தில் இருப்பதாய்
இங்கு பேசிக்கொள்கிறார்கள்.
வானம் உன் 
வசப்பட்டதாய் உலாவும் கதைகளில்..
பொசிந்து கொண்டிருக்கிறது, போதையின் துளிகள்.

நீ
வெற்றியின் அடையாளம் ஆகியிருப்பதை
நானும் நம்பியிருந்தேன்,
அன்றொரு நாள்..
நீ
உன் சகபாடிகளை இழந்தவோர்
தனிமைச் சுடலையில்
தவமிருப்பதாய் கூறும் வரை!




24 மார்ச் 2014

கட்டு

Photo I T.Mayuran I Kilinochchi I 2012 



நீங்கள் இளநீருக்கான தாகத்தில் இருப்பதாய்ச் சொன்னீர்கள், 
நாங்கள் எங்களைக் கட்டிவைக்க சம்மதிக்க, 
அவர்கள் உங்களுக்காய் மரம் ஏறினார்கள்.
நாங்கள் பார்த்துக்கொண்டே இருக்க, 
பறித்த இளநீர் முழுக்க பருகி இரசித்தீர்கள்,
உங்கள் இளநீருக்காய்,
மீண்டும் மீண்டும் இரையான பொச்சுக்கள்
எங்கள் அருகிலேயே கட்டிவைக்கப்பட்டன.
நாங்கள் எல்லோரையும் உயர்த்தும் ஏணிகள் என்று முருக்கேற்றினார்கள்,
ஏறியவர்களும், பருகியவர்களும் போய்விட - இன்னும் கட்டுக்கள் அவிழாமல் நாங்கள்!

03 அக்டோபர் 2013

நிறங்கள்.

Photo I T.Mayuran I Colombo I 2011 
நிறங்களின் கொண்டாட்டத்தில்
நனைகிறது நினைவுகள். 
இதயம் இளகுமெனில்.. 
கண்கள் கைதாவதைப்பற்றி கவலையில்லை!

02 அக்டோபர் 2013

திணிக்கப்பட்ட போட்டிகளும், திசை இழந்த பறவைகளும்!

வெற்றிகளுக்கான எங்கள் திருவிழாக்களில், காணமல் போயுள்ள ஆரோ சிலரின் "நம்பிக்கைகள்" பற்றி சிந்திக்க தோண்றுகிறது. எதிர்பார்ப்புகளும், போட்டிகளும்  ஏற்கனவே நிச்சயம் செய்து வைத்துள்ள பாதையில், பாரிய குழிகளாய் நிறைந்துள்ளன  நம்பிக்கையினங்கள். தவறி வீழ்ந்தோர் பற்றி எந்த கரிசனையும் இல்லாது, "உலக வழமைகள்" வழக்கம் போலவே, ஓட வந்தோரை மீண்டும் மீண்டும் தனது திசை நோக்கி உந்தி தள்ளியபடி உள்ளது. சிறுவர் பராயத்தில் திணிக்கப்பட்ட போட்டிகளால், திசை இழந்த பறவைகளாக வாழும் நண்பர்கள் ஏராளம். இவர்களின் இன்றைய வாழ்வே, அடுத்த தலைமுறைகளை வழிநடத்துவதற்கான செய்தி. இருந்தும், சந்ததிகள் கடந்து, கையளிக்கப்பட்ட அதே அச்சில், இன்னும் எமக்கான சிலைகளை தயாரிக்கும் முயற்சியில் நாம்.  எங்கள் கைகளில் அவர்களில் ஆரோ சிலரின் நம்பிக்கைகளும் உள்ளதாக நம்புவோம்!

12 நவம்பர் 2012

தீ தெறிக்கும் பொறி


தீயன தீயில், தீய்ந்து தேய்ந்திடும் 
தீபநாள் இன்றென  நம்புவோம்!
தீயதை கொய்திடும் கொழுந்து தீ அது 
நெஞ்சினில் உள்ளதாய்  கொள்ளுவோம்!! 

கேடை,  கடவுளார் கொய்தபின் - இன்னமும் 
கெட்டவர் வாழ்கிறார்  கண்டுகொள்!
நரபலி கொண்ட  நம் சூரரை - கோவிலுள் 
கடவுளார் விட்டதேன்? என்றுசொல்!

நல்லதை எண்ணி எம், நாட்களை கடத்த இப் 
பண்டிகை பலன் தரும் உண்மையே, - பெரும் 
தீமையை எரிக்குமத் தீயினை தெறிக்க நம் 
முயற்சி தான் பொறி தரும் முன்னையே !

10 பிப்ரவரி 2012

"இருள்"களுக்கான பரிந்துரை


இருள்- எதிர் மறைகளின் குறியீடாகவே கற்ப்பிக்கப்பட்டுள்ளது. கறுப்பைக் கட்டிக்கொண்ட இருள், பயத்தின் அடையாளமாய், விருப்பத்திற்க்குரியத்தில் இருந்து அன்னியப்படுத்தப்படுள்ளது. இருளின் ஒலிகள் காதில் கிலியை நுழைக்கும்  சாத்தானின் பேச்சாக பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.

கண்கள் கறுப்புக்கு மேல் ’இருளை’ படிக்க முயலாததனால் இருளின் வரைவிலக்கணம் வெறும் கறுப்புடன் மட்டும் மட்டுப்படுத்தப்படுள்ளது. 'கறுப்பின் வல்லமை’ பற்றிய வரலாற்று மறைப்பும், மறை மொழிபெயர்ப்பும் இருள் பற்றிய புரிந்துகொள்ளலை இயலாமைக்குட்படுத்தியுள்ளது. கறுப்பின் “நிஜம்” பற்றிய புரியாமை, இருளின் புரிதலை இல்லாமலாக்கிவிட்டது. இருளின் பின்னால்  கேட்கும் ஒலிகளே இருளின் ஒலிகளாக காது கற்பிதம் செய்து வைத்துள்ளது. இருள் தன்னை நியாயப்படுத்த ஒருபோதும் முற்படாததனால், மனிதன் தன் ஆயுளின் அரைவாசியை அதனுடன் கழித்தாலும் கூட, இருளை விரோதிதுக்கொண்டே இறந்து போகின்றான்.

இருள் பற்றிய எம் புலக்காட்சிக்கு இருள் பொறுப்பல்ல என்று கற்றுக்கொள்வதற்கு "வெளிச்சம் "  எமக்கு வாய்ப்பைக் கொடுப்பதில்லை. எல்லாவற்றையும் காட்டுவது போலக் காட்டி  "சரிகளை" மறைக்கும் "வெளிச்சங்கள்" பற்றி பேசுவது, வெளிச்சத்துக்கு செய்யும் துரோகம் என்ற குற்ற உணர்வு வேறு. இவ்வாறான குற்ற உணர்வுகட்கான மூலம், நம் கற்பித்தல் முறைகளின் அறுவடைகளில் ஒன்று.  இருளின் படைப்புக்களை எல்லாம் ஒளி வெளிச்சம் போட்டு விற்பனை செய்யும். உழைக்கும் வர்க்கம் போல், உழைப்பின் பலன் இழந்த இருள், ஒளியின் அனுபவிப்பைப்பார்த்து மெளனமாய்க் கண் மூடும். இருளுக்காய் வழக்காடப் புறப்பட்ட ஒருசில மின்மினிகளையும் பகலின் வெளிச்சம் மீண்டும் மீண்டும் கொல்லும்.

இருள் நிஜம், பகல் சூரியன் வழங்கிய கடன். கடனாளியை விட, இல்லாதவன் பலவான். பகல்ஆக்கத்தில் பங்கெடுப்பது உண்மை எனினும், ஆரோக்கியத்தை திருடிக்கொள்கிறது. பகல் வெள்ளையைக் கட்டிக்கொண்டு திருடர்களை மறைத்து வைத்துள்ளது. நிகழ்ச்சிகள் வெளிச்சத்தில் நடந்தாலும், வளர்ச்சி இரவில் தான். இது வெளிச்சத்துக்கெதிரான வழக்காடல் அல்ல. தப்பான கற்பிதங்களுடன் மெளனித்து இறந்து கொண்டிருக்கும் "இருளுக்கான" பரிந்துரை. இங்கு “இருள்” என்பது வெறும் இருள் மட்டுமல்ல, அதன் பிரதிகளாய் சஞ்சரிக்கும் எல்லாமும் தான். 

01 ஜனவரி 2012

முதல் நிமிடங்களின் போதனை

"வாழ்தல்" வெறும் பெறுமானங்களுக்கு அப்பால் இன்னும் நிறையாத வெளியில் நகர்வதாகவே உணரமுடிகிறது. இந்த நிறைவின்மையை தோல்வியின் கணக்கு பக்கங்களில் கூட்டி வருட மீதியை நம் தேறிய சோகமாக சமப்படுத்த முயலும் உளநிலை, மனித இயங்குதலை இறுக்கத்திற்குள்ளக்குகிறது. உண்மையில் மனித ஓட்டம்; உடல், உள, சமூக, ஆத்மிக தேவைகள் நோக்கிய புலத்தில் செலுத்தபடுகிறது. நிறைவேறிய தேவைகளின் தளத்தில் இருந்து நிறைவேறா தேவைகளின் தளம் நோக்கிய  இந்த பாச்சல், புவிஈர்ப்பை போல இயல்பானதே.  


இருந்துகொண்டே இருக்கும் நிறையா- வெளியை காந்த புலமாக உணர்ந்து சலிப்பற்று "நிரப்புதல்களை" மேற்கொள்வோரின் வாழ்தலை "வெற்றி" கொண்டவர்களாக கருதுவர் மற்றவர்கள். நிரப்பப்படும் வேகத்தில் நிரம்புதல்களுக்கான வெளிகளும் உருவாகிக்கொள்கின்றன என்ற தனி அனுபவத்தை ஏனோ பொதுமைப்படுத்த மனம் முயல்வதில்லை. நிரம்பிய வெளிகளின் கனதியை நிரம்பா வெளிகளின் கனதி விழுங்கிக்கொள்ளும் இயல்பான உள இயக்கம்; மனதில் மறை உணர்வுகளை தூக்கத்தில் இருந்து எழுப்பி விடுகிறது, இது மனதுக்குரிய மனிதனை மட்டும் தூக்கத்துக்குள் தள்ளி விடுகிறது. புகை வண்டியின் ஓட்டத்துடனேயே அருகில் உருவாகி செல்லும் வெற்றிடம் அண்மையில் உள்ளவற்றை இழுத்துவிடும் மறை சக்தியை தன்னிடத்தில் வைத்துள்ளதாக பெளதிகம் கூறும். ஆக இயங்குதலும் அதற்கு சமாந்தரமான வெற்றிடமும், ஈர்ப்பும், விளைவும் வாழ்தலின் வரை நீளும் என்ற உண்மை எதற்கும், எவருக்கும், எந்த பயணத்திற்கும் பொருந்தும் என்று இந்த வருடத்தின் முதல் நிமிடங்கள் எனக்கு போதிப்பதாக படுகிறது. இந்த நிறையாத வெளியும், அதன் நியாயமான ஈர்ப்பும் மனதில் மறை எண்ணங்களை விதைப்பதற்கு பதில், நேர் சிந்தனையும் யதார்த்த உடன்பாடுகளையும் ஏற்படுத்தும் கருவியை தன் அருகில் கொண்டிருத்தல் என்பதே எவரதும் வரம். சிலர் இதனை கடவுள் என கொள்வர், எனக்கு இது அருகில் உள்ள குழந்தைகளும் நல்ல மனிதர்களும், அடிக்கடி ஏற்படும் பயணங்களுமே ஆகும். 


முடிந்த, இதோ கடந்த வருடத்தின் இதே கணங்களில், இங்கே நான் எழுதியதை போலே, "ஒவ்வொரு பிறப்பிலும் ஏரமான நம்பிக்கைகளும், நேர் சிந்தனைகளுமாக 'இயங்குதல்' புதுப்பிக்கப்படுகிறது". இது வெறும் கொப்புகளுடன் உள்ள மரங்கள், மீண்டும் பருவகாலத்தில் இலைகளை உடுத்துக்கொள்வது போல், வருடப்பிறப்புகள் மனிதர்களில் நம்பிக்கைகளை அரும்புகின்றன. இந்த சோடிக்கப்பட்ட நாட்கள், வாழ்தலை கொண்டாட தூண்டும் உட்சாகத்தை தருகிறது. ஆதலினால் வெற்றிடங்களை "வெறுமைகள்" என்று கற்பிதம் கொள்ளது, எம் இயங்குதலுக்கான தூண்டலாக ஏற்போம். இன்றைய வாழ்தலை கொண்டாடும் கணங்களால், நேற்று வரை நிரப்பாமலே வைத்துள்ள வெளிகளை மூடிக்கொள்வோம். (புகைப்படம் : 'வாழ்தலை' கொண்டாடுவதற்காக தொலை தூரம் இருந்து புலம் பெயர்ந்து  யாழ் வந்த பறவைகள்:  யாழ் - பண்ணை வீதியில்)
புதுவருட வாழ்த்துக்கள் நண்பர்களே! 

07 ஜூலை 2011

தவறிப்போயுள்ள தமிழின் "தலை எழுத்து"














எம் - தமிழின் 
"தலை எழுத்து" 
தொலைந்து போன 
இன்னொரு சோக நாளில், 
கறுப்பை கட்டி 
அழுகின்றன - எம் 
எழுத்துக்கள் எல்லாம்! 

கடல் 
இழந்த தவிப்பில்
அலைகள். 
தூண்டி தொலைந்து போன நாளில்
"துலங்கல்கள்" எல்லாம் 
துன்பங்களை 
தாங்கிய படி!  

கலைந்து போன 
எழுத்து 
மனங்களே; 
கடவுளாகியுள்ள
(சிவத்) தம்பி 
மீண்டும் திரும்பி 
"தமிழ்" செய்ய
தொழுவோமாக!

- எனக்கு எழுத்தறிவித்த ஆசான்களில் ஒருவரை   தொழ,
 இறுதியில் அவரின் எழுத்துக்களே துணை வந்துள்ளன!

29 மே 2011

பூக்களாய் மலர்ந்த மனசும்... புதையலாய் வந்த மலரும்…


என் இதயத்துள் மலர்களையும்…
மனசுக்குள்
பனித்துளிகளையும்….
புரவிவிட்டு
ஏன்னை
மேகத்துக்குள்
ஆழைத்துச்சென்ற
மேகலையே,


நான்
பாலைவனமாய்
கிடந்த போது– என்னில்
மலர்ச்செடிகளை
நட்டாய்!
உன் பார்வையின் ஒளியில்
நான்
ஒளித்தொகுப்பு செய்தேன்,
உன் ஈரமான புன்னகையில் - நான்
ஒட்சிசனும் தண்ணீரும்
பெற்றேன்,
பாலைவனமாய்
கிடந்த நான்
இன்று
நந்தவனமாகிவிட்டதாய்
நினைக்கிறேன்
எல்லாமே…
உன்னால்!


இந்தப் பாறை
உறைந்துதான் இருந்தது....
உன்
பார்வை மின்னல்
என்மேல்
படும்வரை மட்டும்!


நீ தந்த அதிர்வுகளால்
என்னுள்ளும்…..
நெகிழ்வுகள்;
எல்லாம்
எதிர்பார்த்திராதவை தோழி!!


இந்த மூங்கில்
புல்லாங்குழல் ஆகுமென்று
யார் நினைத்தது?


அன்று
நீ
தென்றலாய் வந்து
மோதிய போதுதான்
உணர்ந்தேன்;
அடடா
எனக்குள்ளும் இசை!


வியர்த்துக்கொண்டிருந்த
வெப்பப் பொழுதுகளில்
விசிறியாக வந்த
தென்றல் பெண்ணே!
உனக்குத் தெரியுமா
உன்னை மட்டும்
சுவாசித்துக்கொண்டிருப்பதில்
என்
மூக்குக்கு மட்டும்
எவ்வளவு
மோகமென்று!

உன்னோடு
தொடங்கிய பயணம்
ஒற்றை விமானத்தில்
உலகம் சுற்றியதை விட
உணர்ச்சி மிக்கது

எந்தச் செலவுமில்லாது
செவ்வாய்க்கு
சென்று வந்தவன்
நான் மட்டும் தான்!
உன் நாடியின் மேலிருக்குமே…
அந்த செவ்வாய்க்கு!


இப்போதெல்லாம்
என் மனசு
வைகாசி காலத்து
மரங்களைப் போல
மகிழ்வுடனேயே இருக்கிறது
எல்லாமே…
உன்
வரவால்தான்!


எனக்குள்
வாழ்ந்த கனவுகளுக்கு
உருவங் கொடுத்தவள்
நீ மட்டும்தான்!

எனக்குள்
வாழ்ந்த
உணர்வுகளுக்கு
உறவு கொடுத்தவளும்
நீ மட்டும்தான்!

ஆதலால்தான்…
கரையை விரும்பும்
அலைகளாய் எப்போதும்…
ஓடிவந்துகொண்டிருக்கிறது
என் மனசு.. உன்னிடம்!


உன்னை ஏன் - எனக்கு
பிடித்ததென்று கேட்டாய்
தெரியவில்லை!
மனசுக்கு மட்டும்
காரணம் தெரியும்
அது சொல்லும்
வார்த்தைகளை
மொழிபெயர்க்க
இன்னும் - என் வாய்
வயதுக்கு வரவில்லை
தோழி!

அமெரிக்க கோபுரங்கள்
அடிபட்டதைப்போல்
எல்லாம் எதிர்பாராமலேயே
முடிந்துவிட்டது
இருந்தும்
இங்கு…
இழப்புக்களால்
சந்தோசம்தான்!


நான்
கைதுசெய்யப்பட்டால்
தற்கொலை செய்தது – என்
கவலைகள் மட்டுமே!



என்
ஆப்கானிஸ்தான் நண்பன் நஷரி
எழுதித்தந்த
உன் பெயரை போல்
நீ
கதைக்கையில்
உன் முகத்தில் ஏற்படும்
வளைவு நெளிவுகளை
பார்ப்பதில்தான்
எனக்குப் பிரியம் அதிகம்

மாரிகாலத்து
மலரிதழ்
காலையில்
பனியைப் போர்த்திக்கொண்டு
படுத்திருப்பது போல்…
என் மனசும்
உன் நினைவுகளை
போர்த்தியபடி
நித்திரை செய்வதில்தான்
எவ்வளவு சுகம்?
அறிவும்…
உணர்வும்…
செய்துதந்த
எதிர்பார்ப்பை
விழித்தூண்டிலில்
மாட்டிவிட்டு
காத்திருந்தேன்
வசமாக வந்து
மாட்டிக்கொண்டாய்,
இன்று…
எனக்குள்ளே நீ!

உன் கைகளை பார்;
உள்ளம் கைகளை,
அதில் தெரிவது
வெறும் கோடுகளல்ல
உன்னைத் தேடி
நான் அலைந்த பாதைகள்

உன் கண்ணின் மேலே
கைகளை வைத்துப் பார்
ஒற்றைப் பாதை
நிதானமாய்ச் செல்கிறது
அது எது தெரியுமா?
உன்னை சந்தித்தபின்
நான் நிதானமாய்
நடந்து வந்த நெடுஞ்சாலை

இந்த நதி
தனக்கான
பாதையை
தெரிந்துவிட்டதால்
இனி இங்கே
(நீர்) வீழ்ச்சிகளுக்கு
சாத்தியமில்லை!


உன்
கண் சிமிட்டல்களையும்
புன்னகைப் பொழுதின்
புரவச நினைவுகளையும்
மட்டும்
என்
நுரையீரல்
சுவாசிக்க விரும்புவதால்
நீ….
எப்போதும் வேண்டும்
என்னருகில்!

இப்போது…
கொஞ்சம் சிரி
உன்
ஈரப்புன்னகையில்
என்
இதயம்
தாகம் தீர்க்கவேண்டும்!

சுயகொள்ளி


வாழும்போதே – வாயில்
சுய கொள்ளி வைக்கும்
சூரர்களே|!
உங்கள் சுவாசத்திற்கு
காபனுடன்
ஏன்
கட்டாய திருமணம்?

நிசப்தமாய் இயங்கும்
நுரையீரல்களை
நிக்கொட்டின் கொண்டு
நிரப்புவது நியாயமா?

உயிர்மூச்சின் பயணத்திற்கு
உதவுகின்ற மூக்கை
புகைபோக்கியாக்கும்
உரிமை – உனக்கு
எங்கிருந்து கிடைத்தது?

புன்னகை பூக்கும் வாய்கள்
நெருப்பைப் பூப்பதில்
அப்படியென்ன ஆடம்பரமிருக்கிறது?

புகைக்கையில் - நீ
உள்விடுவது புகையல்ல!
தவணை முறையில் மரணத்திற்கு
விடும் அழைப்பு!
ஒவ்வொரு புகைத்தலிலும்
வாழ்வில் ஐந்து செக்கன்
தொலைகிறதென்பது
அறிவியல் அறிவித்த நிஜம்

புகைத்தல் என்பது…
கவலையைக் கலைக்கும்
ஏற்பாடல்ல!
அது…
சுகமாகப் புரியும்
தற்கொலை!
புற்று நோய்க்கும்
கசத்திற்கும்
பூரிப்புடன் விடுக்கும்
ஆழைப்பு!
மொத்தமாகக் கூறின்
உன் சுற்றத்திற்கு
சொல்லாமல் கொடுக்கும்
தண்டனை!


இன்னும்…
உன் தற்கொலையை
தவணை முறையில்
நிகழ்த்த விரும்பின் - நீ
தாராளமாகப் புகை
வசந்தத்தை அனுபவிக்க
உருவான உடம்பில்
விஷம் தடவ விரும்பும்
உனக்கு
எதைச் சொல்லி இனியென்ன….

(பள்ளிக்கால கவிதைகள் 97)

எழுத்துக்கள்....


இப்போதிருக்கும்
எந்தக் கண்ணும்
காணாத காலத்திலேயே
நாங்கள்
கர்ப்பமாகிவிட்டோம்

ஆனாலும்…
இன்னும்
பிறந்துகொண்டேதான்
இருக்கிறோம்



எங்களுக்கு
உயிருண்டு – ஏன்
மெய்யுமுண்டே
உயிர், மெய் வந்தால்தானே
உண்மையான நிறைவு;
அதுவும் உண்டே

இலக்கியம்தான்; எங்கள்
இலக்குகள்.
அங்கேதான் - நாம்
எழுதுகின்றோம்
ஏன்
சிலவேளைகளில்
ஆதற்குள்ளேயே
அழுகின்றோம்

நாங்கள்….
எழுவதும் விழுவதும் - அந்த
எழுத்தாளனைப் பொறுத்தது
காகிதக் கப்பல் கொண்டு
எங்களை
கரைசேர்ப்பவன் அவனல்லவா!

நாங்கள்- இன்னும்
காலமாகாது இருப்பதும் கூட
அவனால்தான்!

கவிதை…
எம் தரணி தாஜ்மகால்
பட்ட பொழுதுக்கு
வட்ட நிலா எப்படியோ
அப்படிதத்தான் - எமக்கு
கவிதை

மரபுக் கவிதையில்
எங்கள்…
இதய அடிப்புக் கேட்கும் - அதில்
கற்றவருக்குத்தான்
எங்கள்…
கருத்துக்கள் தெரியும்
மற்றவருக்கு – வெறும்
"லப் டப்" மட்டுமே

குழந்தையின்
கெஞ்சுதலைப் போல
ஒப்பனையில்லாத
புன்னகையை – நாங்கள்
புதுக்கவிதையில் தான்
புரிகின்றோம்.
அப்பட்டமான
ஆனந்தத்தையும் - ஏன்
புழுக்கத்தையும் கூட
அதில்தான் பூட்டுவோம்!

எப்படியாயினும்
நாங்கள்… எழுத்துக்கள் - ஆமாம்
இறந்த காலத்தை; எதிர்காலத்துக்கு
காவிச்செல்லும்
எறும்புகள் நாங்கள்!!
(பள்ளிக்கால கவிதைகள் 97)